Social Icons

Pages

Friday, April 24, 2015

இராமானுசன் எனக்கு ஆர் அமுதே!



எம்பெருமானார் எதிராஜர்  உடையவர் பாஷ்யக்காரர் என்றெல்லாம் அழைக்கப்படும் ஸ்ரீமத் ராமானுஜர் ,நம்மாழ்வார் பெருமானின் திருவடிகளில் பணிந்து உயர்ந்தவர்.

’உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை’  எல்லாம் கண்ணன் என்றே இருப்பவர்கள் ஆழ்வார்கள். ஆழ்வார்களின் திருவடிகளே  ராமானுஜருக்கு உகந்ததாக இருந்தது.

 நாதமுனி ஆளவந்தார் போன்ற உயர்ந்தவர்களை  மனத்தில் பொருத்தி உள்ள ராமானுஜனின் திருவடிகளைப்பற்றிக்கொள்வதே நாம் உய்ய வழி என்கிறார் திருவரங்கத்தமுதனார்.இவர் தாம் ராமானுஜ நூற்றந்தாதியை அருளியவர்.அதில்தான்.’சீலங்கொள் நாதமுனியை நெஞ்சால் வாரிப்பருகும் நம் இராமனுசன்’என்றும்’யமுனைத்துறைவன்(ஆளவந்தார்) இணையடியாம் கதி பெற்றுடைய’வர் ராமானுஜர்   என்றும்  குறிப்பிடுகிறார்.


கொடிய வலிய கலியின் துன்பங்களைக்கடக்க  ராமானுஜன் புகழ் பாடுவதே நலம் என்கிறார் அமுதனார். ’நாம் மன்னிவாழ சொல்வோம் அவன் திருநாமங்களே’ என்று நம்மை அழைக்கிறார் திருவரங்கத்து அமுதனார்.


ஓம் நமோ நாராயணாய!

எட்டெழுத்து மந்திர மகிமையை திருமங்கை ஆழ்வார் இப்படிப்பட்டியலிடுகிறார்.

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
      
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
      
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
      
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
      -
நாராயணா என்னும் நாமம்       

   
இந்த மந்திரத்தை தக்க குருவிடமிருந்தே உபதேசம்பெற்ற பிறகு நாம் சொல்லலாம் என்பதை எளிமைப்படுத்தினார் ராமானுஜர்
 அனைவரும் உய்ய இந்த மந்திரத்தை  உரக்கச்சொன்னார்.

ராமானுஜருக்கு  நாம் செய்யும் நன்றிக்கடனாக அவரது திருநாமத்தை நாம் 108முறை சொல்லி வழிபடவே  ராமானுஜ நூற்றந்தாதியை அருளினார் அமுதனார்.

தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சரியாப்பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந்தாமமென்னும்
திவந்தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்
குவந்தருந்தேன், அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே

சுபமுகூர்த்தப்பத்திரிகைகளில்  ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ என்றே முகப்பிடுவது வைணவ மரபு. அடியேன் ராமானுஜதாசன் என்றேவைணவப்பெரியோர்கள்  ஒருவரைஒருவர்பார்க்கும்போது கூறிக்கொள்வார்கள் வைணவ ஆலயங்களில்  மற்றும் இல்லம் எனப்படும்திருமாளிகைகளில் திரு ஆராதனம் நிறைவேறியபின்னர் திவ்யபிரபந்தம் ஓதியபின் உரத்த குரலில் ராமானுஜர் புகழ் பாடுவதை என்றும் கேட்கலாம்.

‘எல்லாக்காலங்களிலும் தடையற்ற பேராற்றல் பொருந்திய ஸ்ரீமத் ராமானுஜரின் தெய்வீக ஆணை வளரட்டும்! மேன்மேலும் வளரட்டும்!ஸ்ரீமத் ராமானுஜரின் தெய்வீக ஆனை நாள்தோறும் ஒளிவீசி எல்லா திசைகளிலும் பரவி அந்த தெய்வீக ஆணை மக்களுக்கு நன்மை செய்யட்டும்’ என்பதே அந்த  புகழ் வாசகங்கள்! 

ஸர்வ தேச தசா காலே ஷ்வ வ்யாஹத பராக்ரமா |
ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா வர்த்ததாம் அபிவர்த்ததாம் ||
ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா ப்ரதி வாஸரமுஜ் ஜ்வலா |
திகந்தவ்யாபினீ பூயாத் ô ஹி லோக ஹிதைஷிணீ

, அவர் காட்டிய மார்க்கம் மன வேற்றுமை அறுத்து அனைவரையும் ஒன்றிணைத்தது .

தேச மெலாம் உகந்திடவே பெரும்புதூரில் சித்திரையில் ஆதிரை நாள் தோன்றி’ என்று  தேசிகனும் ராமானுஜரைப் புகழ்ந்துபாடும்போது கூறுகிறார்.

 உலகத்தவர் உய்விக்கவே தோன்றியவர் எம்பெருமானார்
‘கருணைக்கடல்  என்று உடையவரை  கூரத்தாழ்வார் அருள்வார். திருவாய்மொழியைப்பெற்ற தாய் நம்மாழ்வார் என்றும் வளர்த்த தாய் ஸ்ரீ ராமானுஜரென்றும் திருக்குருகைப்பிரான் பிள்ளான் புகழ்ந்து சொல்கிறார்.

வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ்மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத் தாய் இராமாநுசன்

முதன் முதலில்  திருவாய்மொழிக்கு விளக்க உரையாகத் தம் சீடரான திருக்குருகைப்பிரான்பிள்ளானைக்கொண்டு ஆறாயிரப்படி உரையைத்தோற்றுவித்த  பெருமை ராமானுஜரையே சேரும் இதற்குப்பிறகு திருவாய்மொழிக்கும் மற்ற திவ்யபிரபந்தங்களுக்கும்  ஏராளமான பேருரைகள் வெளிவந்தன.

நம்மாழ்வாரின் திருவடிகளைத்தொழுவதற்கு ஆழ்வார்  திருநகரி சென்றபோது  ராமானுஜர் உணர்ச்சிப்பெருக்குடன்

இதுவோ திருநகரி, ஈதோ பொருநை
          
இதுவோ பரமபதத்து எல்லை இதுவேதான்
     
வேதம் பகர்ந்திட்ட மெய்பொருளின் உட்பொருளை
          
ஓதும் சடகோபன் ஊர்!

என வியந்துபோற்றினாராம்!
சமயத்தலைவர்களில் தனிச்சிறப்பு மிக்கவர் ராமானுஜர்
/மால்மீது பக்தி, வேதம் உபநிஷத்துகளுக்கு சரியான விளக்கம்காணும் ஞானம்,பலனை எதிர்பாராது மக்களுக்கு உழைத்த தர்மசிந்தனை, என  உடையவரின் பெருமை  சொல்லி மாளாது. சோதனைமிகுந்த காலங்களில் வைணவ சம்பிரதாயத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்திய சாதனையாளர் எதிராஜர்!  உடையவர் திருநட்சத்திரம் இன்று. எம்பெருமானர் அருள் பெறுவோம்! வாழ்வில்  உயர்நிலை அடைவோம்!
பற்பம் எனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும் பாவனம் ஆகிய பைந்துவராடை பதிந்த மருங்கழகும் 
முப்புரி நூலொடு முன் கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும் முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா அழகும் கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக்கண்ணழகும் காரிசுதன் கழல் சூடியமுடியும்,கனக நற்சிகைமுடியும் எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே!


மேலும் படிக்க... "இராமானுசன் எனக்கு ஆர் அமுதே!"

Friday, April 17, 2015

தப்பித்தால் போதுமென..,,

15.4.15http://www.navinavirutcham.in/2015/04/blog-post_15.html//

தப்பித்தால் போதுமென..

. ஷைலஜா



கிருஷ்ணராஜபுரம் நெருங்க நெருங்க எனக்கு வயிற்றில் புளியைக்கரைக்க ஆரம்பித்தது.
 
சின்ன  உதறலுடன் டாய்லெட் பக்கம் நழுவினேன். ரயில் அந்த ஸ்டெஷனை விட்டுப்புறப்படுகிறவரை டாய்லட் கண்ணாடியில் வழுக்கைத் தலையை விரல்களால் வாரிக்கொண்டு, பல் வரிசையை அழகு பார்த்துக்கொண்டு , அழகு காட்டிக்கோண்டு இருந்தேன்.
 
‘அம்மாடா தப்பினோம்’ என்று வெளியே வந்தால்....
 
 
“ஹலோ ஸார்!” ரதனசாமி நிற்கிறார்!
 
அசடு வழிகிறது எனக்கு.
 
யாரிடமிருந்து தப்பவேண்டும் என்று நினைத்தேனோ அவரிடமே மாட்டிக்கொண்டுவிட்டேன்.
 
“ஸார்! வண்டி இன்னிக்கு மூணு நிமிஷம் லேட். நல்ல காலம் முப்பதுலேட்டாக்காமல் விட்டானே! அதுகூடப்பெரிதில்லை வண்டி தண்டவாளத்துமேல போகிற வரை புண்ணியம். அதெல்லாம் லால்பகதூரோட போச்சு. என்னைக்கேட்டால் இந்த ரயில்வே போர்டு, ரயில்வே மந்திரி எல்லாமே.....”
 
ரத்னசாமி ஆரம்பித்துவிட்டார். இனிமேல் சிடி ஸ்டேஷன் போகிறவரைக்கும் மனுஷர் நிறுத்தமாட்டார். பேச்சு பேச்சு வாய் ஓயாமல் பேச்சு.
 
“கையில என்ன ஹிண்டுவா?”’
 
“ஆமா  படிங்கோ” என் பேப்பரை நீட்டினேன். ஆளைவிட்டால்  போதும்..
 
“நோ ஸார் பேப்பரை எவன் படிப்பான்? நான் பேப்பர் படிக்கறதை நிறுத்திப் பல வருஷம் ஆச்சு. மௌனமா பேப்பர் படிக்கறது என்கிறது கொடிய தண்டனைன்னு நினைக்கிறேன்! வாய்விட்டுப்பேசினாலே உலகவிஷயம் எல்லாம் வெளில வந்துடுமே  என்ன சொல்றீங்க?”
 
நான் ஒன்றும் சொல்லவில்லை.
 
“கட்லேக்காய் கட்லேக்காய்” என்ற வியாபாரக்குரல்ரத்னசாமியின் காதருகே வரவும், கடலைக்கூடையை  சுமந்து வந்த இளைஞனை ஏறிட்டார். பிறகு,”தமிழ்தான நீ? மூஞ்சிசிலயே தெரியுதே அது? எங்களைப்போல கர்னாடகாக்கு பொழைக்கவந்தவனாக்கும்?சரி சரி....கடலைஅஞ்சுரூபாக்குக்கொடு” என்று வாங்கிக்கொண்டு பொட்டலத்தைப்பிரித்தவர்,”முன்னெல்லாம் அம்பது பைசாக்கு கிடச்ச கடலை இப்போ அஞ்சுரூபா பாருங்க சார்!” என்றார்.
 
நாலுகடலைமணிகளை எடுத்த தன்கையில் வைத்துக்கொண்டு பொட்டலத்தை அப்படியே என்னிடம் நீட்டினார்.”எடுத்துக்குங்க..மல்லாட்டை என்பா சௌத் ஆர்காட்ல. நம்மூர்ல..இங்க பெங்கலூர்ல கடலக்காய்! கடவுள்மாதிரி உருவம் ஒன்று பெயர்கள் பல  ஹஹ்ஹா!” தனக்குத்தானே ரசித்து சிரித்துக்கொண்டார்.
 
எனக்குத்  தலையைப்   பிய்த்துக்கொள்ளலாம் போல இருந்தது. இனிமேல் இந்த பங்கார்பேட் பாசஞ்சரில் பயணமே செய்யக்கூடாது என்கிற முடிவுக்கு வந்தேன்.
 
ஒருமாதமா இரண்டுமாதமா ஒன்பதுமாதமாய் இந்த ரத்னசாமியுடன் இதே தொல்லை. தினமும் பெஙகளூர் சிடி ரயில்நிலையத்திலிருந்து பங்கார்பேட் பாசஞ்சரில் ஏறி ஒருமணீநேரப்பயணத்தில்  அந்த ஊருக்குபோய் அலுவலகப்பணி முடித்து  பெங்கலூர் திரும்போது சரியாய் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்தில் ரத்னசாமியும்
நான் இருக்கும் பெட்டியாகப்பார்த்து  வந்துவிடுவது வழக்கமாகிவிட்டது. பதினைந்துநிமிடங்கள்- சிடி ரயில்நிலையம் -வருகிறவரை பேசிப்பேசியே அறுத்துவிடுவார்.
 
“என்ன சார் டல் ஆகிட்டீங்க? ”
 
“ஒண்ணுமில்ல லேசா தலைவலி” என்று ஜன்னல்பக்கம் முகத்தைத்திருப்பிக்கொண்டேன். ரயிலைவேறு க்ராசிங் என்று நட்டநடுவழியில் நிறுத்திவிட்டார்கள். இன்றைக்கு பதினைந்து நிமிஷம்  என்பது முப்பது நிமிஷமாகவும் ஆகலாம்.
 
“தலைவலிக்கு நான் ஒரு வைத்தியம் சொல்றேன் கேளுங்கோ...மிளகு இருக்கோல்லியோ அதை எடுத்து,லேசா அதை..” அவர் என்னவோ சொல்லிக்கொண்டிருக்க நான் ஜன்னலுக்கு வெளியே கண்ணோடு மனத்தையும் செலுத்த ஆரம்பித்தேன். தலை மட்டும் ஒப்புக்கு ஆடிக்கொண்டிருந்தது.
 
ரயில்மறுபடி ஓட ஆரம்பித்தது.
 
“பெங்களூர் கண்டோன்மெண்ட் வந்தாச்சு  அடுத்து சிடி ஸ்டேஷன் தான்” வீறிட்டார் திடீரென.
 
பிறகு என்னிடம்” தினம் பங்கார்பேட் பயணம்பண்றது சிரமமாயில்லையோ ஸார்? ஆங் ,,,ஆனாஅதான் சொன்னேளே அன்னிக்கே இன்னும்  ஒரேவருஷம் தான் அப்றோம் ரிடையர் ஆகிடுவேன்னு... மேலும் சொந்தவீடு  பெங்களூர்ல கட்டிண்டதும் இப்படி திடீர்னு பாங்குல வேலை மாத்திட்டான்னும் சொன்னீங்க....நினைவுக்கு வந்துட்டது இப்போ.... என்னவோ போங்க  வயசு எனக்கு அம்பதுதான் ஆறது ஆனா வர வர அசாத்திய ஞாபகமறதி. எங்கப்பா மைசூர்ல எழுபத்திஎட்டுவயசுக்கு கிண்ணுனு  இருக்கார்.
சாம்ராஜ் உடையார்கிட்ட சின்னவயசுல வேலைபார்த்தப்பொ ந்டந்ததையெல்லாம்  மறக்காம் சொல்வார்....”
 
சிடிஸ்டேஷன் வருகிறவரைதன் அப்பாவின் பெருமையை இழுத்துக்கொண்டே வந்தார்.
 
அப்பாடா பெஙக்ளூர் சிடி ஸ்டேஷன் வந்துவிட்டது.
 
நான் வேகமாய் இறங்க கதவருகில் வந்தவர்,”பாத்து ஸார்.... வண்டி இன்னும் நி8க்கவே இல்லை.... நிதானமாய் இறங்கணும் ..ஒருதடவை இப்படித்தான் என் மச்சினன அனுமந்து.....” ரத்னசாமியை அப்படியே வெட்டிக்கொண்டு  கூட்டத்தில்  கலந்துவிட்டேன்.சப்வேயில் நடந்து எதிரே ஃப்ளைஓவரில் வேகமாய் நடந்து எனது பஸ்ஸிற்காக  மெஜஸ்டிக் பஸ்நிலயத்தில் காத்திருக்கையில் அங்கும் வந்துவிட்டார்.
 
“ஸார்! உங்க ஏரியா ஜெய்நகர் ஒன்பதாவது ப்ளாக்தானே அதுக்கு 18ஆம் நம்பர் பஸ் தானே? ”
 
வெறுப்பைவெளிக்காட்டாமல் தலை ஆட்டினேன்.
 அங்கபாருங்க வந்திட்டுருக்கு! எனக்கு ராம்மூர்த்திநகர்போகணும் அங்க வாஸ்து சாஸ்திரம் சொல்ல  என்னை அழைச்சிருக்கார் மிஸ்டர் பூவராகவன்னு ஒருத்தர். என்ன பண்றது  சிட்ஃப்ண்ட் கம்பெனியை இழுத்துமூடினதும் எனக்கும் வேலைபோயி இப்படி வாஸ்துலதான் பிழைப்பேநடக்கறது. இன்ஃபாக்ட் வாஸ்து சாஸ்திரம்ல என் அண்ணன் கில்லாடி. பேரு வாசுதேவன்.சென்னைல வியாசர்பாடில  இருக்கான் . வாஸ்துதேவன்னு தான் அவனை எல்லாரும் சொல்வா.....” ரத்னசாமி சொல்லிக்கொண்டே இருக்க..
 
நல்லவேளை பஸ் வந்துவிட்டது.
 
வாழ்க பதினெட்டு எனக்கூவிக்கொண்டே பஸ்ஸிலேறிக்கொண்டுவிட்டேன்.
 
மறுநாள் காலை எழுந்ததுமே என் மனைவி,” இன்னிக்கு நீங்க கிருஷ்ணராஜபுரம் போயி நம்ம ரேகாக்கு தரகர் சொன்ன வரனை  நேர்ல போய் பார்த்துவாங்க” என்றாள்.
 
தலையாட்டினேன்
 
“பைய்னைமட்டும் பார்த்துட்டுவந்துடாதீஙக்  வீடு வாசல் அங்கே இருக்கிற சூழ்நிலை பையனோட அம்மா அப்பா கூடப்பொறந்தவங்க எல்லாரும் எப்படீன்னும் நோட்டமிட்டு வாங்க..”சரிடி எனக்கு எல்லாம் தெரியும்”
 
“என்ன தெரியும்? யார் எது சொன்னாலும் ஒருவார்த்தை பேசாமல் தலையாட்டத்தெரியும் குரும்பாடுமாதிரி”
 
ஹா! ரத்னசாமிக்கு நான் தலையாட்டுவது இவளுக்கு எப்படித்தெரியும்?
 
க்ருஷ்ணராஜபுரத்திற்கு ஆட்டோவில் வந்துசேர்ந்தேன்.மனைவி சொன்ன விலாசத்தில் தெருமுனையிலேயே இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.
 
”ஹலோ! ரயில் ஃப்ரண்ட்! எங்க இத்தனைதூரம் அதுவும்  ஞாயித்துக்கிழமைல?  ஹார்ட்டி வெல்கம் டு கிருஷ்ணராஜபுரம் ஸார்! இது என் ஹோம் டவுன்!”
 
 
பின் பக்கமிருந்து குரல்கொடுத்தபடி ரத்னசாமி ஓடிவந்து எனக்கு முன்வந்து கைகுவித்து நின்றார். வாயெல்லாம் சிரிப்பு!
 
நான் கடுப்பை மறைத்தபடி,” ஹிஹி..இங்க ஒருத்தரைப்பார்க்கவந்தேன் அர்ஜண்டா போயிட்டுருக்கேன்” என்று ஓரடி எடுத்துவைத்தவனை குறுக்கே வந்து தடுத்தார்.
 
,” மூச் விடக்கூடாது...என்னோட பேட்டை இது. இங்க நுழைந்தவர்களை என் வீட்டுக்கு அழைக்காமல் நான் விடமாட்டேன். ...”
 
”ர.. ரத்னசாமி?”
 
“பேசப்படாது வாங்கோ”
 
வேறுவழியின்றி அவரைத்தொடர்ந்தேன்
 
குரும்பாடுதானோ நான்? இருக்கட்டும் இருக்கட்டும் இன்றோடு இந்த ரத்னசாமிக்கு முழுக்கு போட்டுவிடவேண்டியதுதான். நடுத்தெருவில் எதற்கு ரசாபாசம்? சிஙக்த்தை அதன் குகையிலேயே சந்திப்போம். ரத்னசாமி வழியெல்லாம் பேசிக்கொண்டே வந்தார். தெருவைப்பற்றி தார்சாலையைப்பற்றி லாந்தக்கம்பத்தைப்பற்றி கம்பத்தில் கட்டி இருந்த பசுமாட்டைப்பற்றி....
 
“இதான் ஸார் என் வசந்த மாளிகை வாங்கோ  உள்ள வாங்கோ”
 
உள்ளே அழைத்துப்போனவர் கூடத்தில் நாற்காலியைத்தட்டிப்போட்டார்.
 
பரபரவென் உள்ளே போனவர் ஐந்துநிமிடத்தில் காபிடம்ப்ளருடன் வந்துவிட்டார்.
 
”சார்! இந்தக்காபியை  குடிங்கோ...இதைக்குடிச்சா ஜன்மத்துக்கும்மறக்கமாட்டீங்கோ.. ஒருதடவை இப்படித்தான்  ஜான்சன்னு ஒருத்தர்-என்-பேனாநண்பர் இங்கிலாந்துலேந்து இங்கவந்தவர் இந்தக் காபியைக்குடிச்சிக்குடிச்சி  பைத்தியமே பிடிச்சிட்டதுன்னா பாத்துக்குங்களேன்”
 
“அப்போ எனக்கும் பைத்தியம் பிடிக்கணுமா ரத்னசாமீ?” சீறினேன் நான்.
 
“ஸார்! என்ன  திடீர்னு இப்படி..என்ன ஆச்சு ஸார்? பதட்டமுடன் ரத்னசாமி கேட்க நான் கோபமாய்  அந்த காபிடம்ளரை சமையலறை நோக்கி வீசி எறிகிறேன். அப்போது அவர் மனைவிபோலிருக்கிறது  நாற்பத்திஏழு வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி  சமையற்கட்டு வாசலுக்கு பதறிப்போய் வந்துநின்றாள்.
 
அவளைகக்ண்டதும் ரத்னசாமி,”நீ ஏன் வந்தே போ போ “ என்றுவிரட்டினார் பதிலுக்கு அவள்,”பே பேபே..” என்று விழித்தாள்.
 
“ போயேன் உள்ள..சாரெல்லாம் நம் வீட்டுக்கு வரக்கூடியவர் இல்ல நான்  ரொம்பக்கேட்டுட்டுதால வந்திருக்கார் அவர் முன்னாடி உன் ஊமை வாயை திறக்காதே போ” என்றார் ரத்னசாமி எரிச்சலுடன்.
 
தலைப்பொட்டில் அடித்தமாதிரி இருந்தது எனக்கு.
 
 
“ரத்னசாமீ?’ என்கிறேன் திடுக்கிட்டகுரலில்.
 
அவர் குரலைத்தழைத்து,”ஸார்! மன்னிச்சிடுங்க..வீட்ல நான் சுவரோடதான் பேசணும்...குழந்தைகுட்டியும் கிடையாது..பெண்டாட்டிக்கும் பத்துவருஷம் முன்னாடி எனக்கு சிட்ஃப்ண்ட் கம்பெனில திடீர்னு வேலைபோன சேதிகேட்ட அதிர்ச்சில  வாய் ஊமையாகிட்டது.......” என்று தயக்கமாய் சொல்லி முடித்தாலும் அவரிடமிருந்து நான் நகரவில்லை   இல்லை இல்லை நகரமுடியவில்லை.
*****************************************************************************
 
மேலும் படிக்க... "தப்பித்தால் போதுமென..,,"

Sunday, April 12, 2015

ஆதரவு...சிறுகதை




''டீச்சர்... உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்,'' என்று சொல்லி, தன் அருகில் வந்து நின்ற சுமதியை, வியப்புடன் பார்த்தாள் தேவகி. 'வகுப்பில் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாமல் அழுத்தமாய் உட்கார்ந்திருப்பவள், இப்போது வீட்டிற்குக் கிளம்பும்போது பேச வர்றாளே...' என்று நினைத்து, ''எதுவானாலும் நாளைக்குப் பேசு; எனக்கு இப்ப நேரமில்ல,'' என்றாள் சற்று எரிச்சலுடன்!
சாதாரணமாய் யாரிடமும் எரிந்து பேசத் தெரியாதவள் தேவகி. பிறவியிலே வலது கால் ஊனம் என்பதால், உள்ளூர தாழ்வு மனப்பான்மையுடன் வளர்ந்தவளுக்கு, சுமதியை பார்த்த பின், அந்த எண்ணம் முற்றிலும் மாறியது.
ஐந்தாம் வகுப்பில் புதிதாய் சேர்ந்திருக்கும் சுமதி, ஆதரவற்றோர் இல்லத்து சிறுமி. சுமதியைப் போல சிலரை பள்ளியில் சேர்க்க வந்த போது, இல்லத் தலைவி சுகன்யா, 'எல்லாம் அனாதைங்கம்மா... ஏதோ நானும், என் புருஷனும் இதுங்களுக்காக இல்லம் நடத்தி காப்பாத்தறோம்; இதுங்களைப் படிக்க வச்சு, பெரியாளாக்க வேண்டியது ஆசிரியர்களான உங்க பொறுப்பு...' என்றாள்.

அந்த எண்ணத்தில் தான், தன் வகுப்பில் சேர்ந்த சுமதிக்கு பாடம் சொல்லிக் கொடுத்தாள் தேவகி. சற்று கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டாலும், எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டாள் சுமதி. பள்ளி முடிந்ததும் விழுந்தடித்து, இல்லத்திற்கு ஓடி விடுவாள்.
இது குறித்து, ஒரு முறை இல்லத் தலைவி சுகன்யாவிடம் பேசினாள் தேவகி.
'எங்க இல்லத்துக்கு, யாரோ ஒருத்தர் இவளையும், இவ தம்பியையும் கொண்டு வந்து விட்டாங்கம்மா. சாப்பிட மட்டும் தான் வாயத் திறப்பா. சாயந்திரம், 5:00 மணிக்கு இல்லத்துல டிபன் போடுவோம்; அதுக்காக ஓடி வந்துடுறா போலிருக்கு... அழுத்தக்கார கழுதை; விட்டுத் தள்ளுங்க...' என்று, அலுத்துக் கொண்டாள் சுகன்யா.
அவளை தனிமையில் அழைத்து, 'சுமதி...நீ, வகுப்புக்கு வந்து மூணு மாசமாச்சு; ஏன் எப்பவும் இறுகிப் போன முகத்தோடயே இருக்கே... உனக்கு என்ன பிரச்னைன்னு என்கிட்ட சொல்லு. நான் உனக்கு டீச்சர் மட்டுமில்ல, தாய் மாதிரி. அதனால, என்கிட்ட பயமில்லாம பேசு...' என்றாள்.

'ஒண்ணுமில்ல டீச்சர்...' என்றாள் தயக்கத்துடன்!

மேலும் வாசிக்க...)
 இன்றைய வாரமலர்  புத்தகத்தில்.பக்கம் 26...


மேலும் படிக்க... "ஆதரவு...சிறுகதை"

Friday, April 03, 2015

வனவேடன் ஒருவன் வந்தான்!




வனவேடன் ஒருவன் வந்தான்
முருகன் என்னும் பெயரோடு
வனவேடன் ஒருவன் வந்தான்
கணைபோலும் விழியாலே
உருக்கியே நின்றான்(வனவேடன்)

.............(மேலும் கேட்க...)

பதிவர் ஜிரா  சிலவருடங்கள்முன்பு எழுதிய பாடல் இது.இதனை இன்று பங்குனி உத்திரம் என்பதால்  முருகனுக்கு சமர்ப்பிக்கும்  எண்ணத்தில் அளிக்கிறேன்  பாடலை பாடியது  யார் எனத்தெரிகிறதா?:)



http://youtu.be/f_pbsfjyPtI


மேலும் படிக்க... "வனவேடன் ஒருவன் வந்தான்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.