Social Icons

Pages

Friday, January 30, 2015

காந்தி ஆஸ்ரமம்.

குஜராத் மாநிலத்தில்  சுற்றுலா செல்லும்போது அவசியம் நாம் பார்க்கவேண்டிய இடம் சபர்மதி ஆஸ்ரமம்.



காந்தி ஆஸ்ரமம் என்றும் சொல்கிறார்கள். 

 36 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த ஆஸ்ரமம் குஜரத் மாநிலத்திற்கே சிறப்பு தரும் சபர்மதி நதிக்கரையில் அமைந்துள்ளது. அடர்ந்த மரங்களும் விதவிதமான தாவரங்களும்  மரங்களில் வசிக்க வரும் பறவைகளுமாக இடம் காட்சி அளிக்கிறது

.அமைதி தவழும் இந்த இடத்திற்கு தபோவனம் என்றே பெயரிட காந்திவிரும்பினாராம். ஆனால் சத்தியம் அஹிம்சை உயர்ந்த  சிந்தனை எளிமை  சுதந்திர வேட்கை அதை அடையப்போராடுவதற்கான மனவலிமை போன்ற லட்சியங்களை நிலை நிறுத்தும் வகையில் ‘சத்யாக்ரக ஆஸ்ரமம்’ என்கிற பெயரே பொறுத்தமானதாக நினைத்துத்தேர்வு செய்யப்பட்டதாம்.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பியதும் தாம் வசிக்க  ஏற்ற இடமாக அகமதாபாத் நகரினை தான்  தேர்ந்தெடுத்த  காரணத்தை  காந்தீஜி தனது சத்திய சோதனை புத்தகத்தில்  இப்படிக்குறிப்பிடுகிறார்.

‘மற்ற இடங்களைவிட என் மனதுக்கு அகமதாபாத  பிடித்திருக்கிறது.நான் குஜராத்தி என்பதால்  என் மொழியில் பேசி லட்சியங்களை விளக்கிப்புரியவைத்து மக்களை நெருங்க முடியும் நாட்டிற்கு அதிக அளவு சேவை செய்யமுடியும்.மேலும் அகமதாபாத் கைத்தறி நெசவுக்குப்பெயர்பெற்ற இடம் கையினால் நூல்நூற்கும்குடிசைத்தொழிலுக்கு புத்துயிர் அளிக்க இது வசதியான இடம்/’’


1915ஆம் ஆண்டிலிருந்து காந்தி தன் மனைவி மற்றும் எண்ணற்ற தொண்டர்களுடன் இங்குதான் வாழ்ந்தார்.  தண்டி உப்புசத்தியாக்ரக யாத்திரை 1930ல் இங்கிருந்துதான் தொடங்கியது. நாடு சுதந்திரம் அடைந்தாலேஒழிய தாம் சபர்மதி ஆஸ்ரமத்துக்கு திரும்ப்போவதில்லை என்கிற உறுதியுடன் காந்தீஜி அங்கிருந்து புறப்பட்டார்.


காந்தீஜியின் இல்லத்திலிருந்து நம் சுற்றுலாவைத்தொடங்கலாம்.

 வழியில்கருப்புசலவைக்கல்லில் காந்தீஜியின் உருவச்சிலை நம்மை வரவேற்கிறது. காந்தீஜியின் இல்லத்திற்குப்பெயர் ஹிதய குஞ்ச்  
 இந்த இடம் சரித்திர மகத்துவம் வாய்ந்தது. நேரு படேல் வினோபா சரோஜினி நாயுடு என பலபிரபலங்கள் அரசியல் தலைவர்கள் அண்ணலைப் பார்க்க வந்த இடம். கட்சிக்கூட்டங்களும் விவாதங்களும் முக்கியதீர்மானங்களும் இங்கே நிகழ்வுகளாக இருக்கும்.

 காந்தீஜி பயன்படுத்திய பொருட்கள் இங்கு உள்ளன. அன்னைகஸ்தூரிபாயின் அறைக்கு வெளியே அவரதுபோட்டோ மாட்டப்பட்டுள்ளது உள்ளே அன்றாடம் பயன்படும் பொருட்களைத்தவிர வேறெதுமில்லை. எளிமையின் சிகரங்கள் அல்லவா  மகாதமாவும் அவர்தம் வாழ்க்கைத்துணயும்!

நந்தினி என்ர விருந்தினர் விடுதி உள்ளது வெளியூரிலிருந்து காந்தீஜியை சந்திக்கவருபவர்கள் அங்குதங்குவார்களாம். வினோபா குட்டீர்() ல் ஆச்சர்ய வினோபாஜி வந்தபோது தங்கினாராம்.

சபர்மதி நதிக்கரையை ஒட்டி அமைந்த உபாசனா மஞ்ச் என்கிறபிரார்த்தனை மன்றம் எத்தனை அலுவல்கள்இருப்பினும் காந்தீஜி பிரார்த்தனைக்காக நேரம் ஒதுக்கத்தவறியதில்லை. திறந்த வெளியில் இயற்கை அமைத்துக்கொடுத்த ரம்யமான சூழ்நிலையில்  மனதை ஒருமைப்படுத்தி பிரார்த்தனையில் ஈடுபடுவதற்காக  உட்கார வசதியாக விரிக்கப்பட்ட தரைவிரிப்பு அப்படியே உள்ளது.

இங்கிருந்து அடுத்து அருங்காட்சியகம் செல்கிறோம்.
 1963,ம் ஆண்டு இதை நேரூஜி திறந்துவைத்தார் என தகவல் சொல்கிறது.
இந்த மியூசியம் முழுவதும் காந்திதரிசனம் தான்.  Mohan to Mahathma
என்கிற பகுதியில் காந்தீஜியின் வாழ்க்கை சம்பவங்கள் ஒளிப்படமாக பார்க்கமுடிகிறது.
சுதந்திரப்போராட்டத்தின் கதையை கொலு வைக்கிறபாணியில்
 சொல்லி குழந்தைப்பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறார்கள்.

காந்தீஜியின் மூன்று குரங்குகளுக்கும் இங்கு இடமுண்டு.
மகாத்மா எழுதிய கடிதங்கள் கட்டுரைகளின்
 கையெழுத்துப்பிரதிகள் அவரைப்பற்றிய ஆவணப்படங்கள் அனைத்தும் இங்கு பத்திரமாகப்பேணப்படுகின்றன. நிறையபுத்தகங்களும் உள்ளன

இன்னும் ஒருபகுதியில் அவருக்கு மக்களிடமிருந்து வந்த கடிதங்களின் உறைகள் மட்டும் காட்சிப்பொருளாக  வைத்திருக்கிறார்கள்.
அந்த நாளில் இது நன்கொடையால் நடத்தப்பட்டதால் தனிப்பட்ட.முறையில் இடத்துக்கு
வருகைதந்த காந்தீஜியின் உறவினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கான சாப்பாட்டு செலவைகாந்திஜீ தன்னுடைய பணத்திலிருந்து கொடுத்துவிடுவாராம்..

காந்திதரிசனம் முடித்து  ஊர் வரும்போது  செய்தித்தாள்களில் வன்முறை அஹிம்சை  பெண்களுக்குப்பாதுகாப்பின்மை  பற்றிய  செய்திகளையே பார்க்க நேர்ந்தபோது இன்னொரு காந்தி பிறந்துவந்தாலும் இந்த நாட்டை சீர்படுத்த முடியுமா என்கிற  கேள்வி  விடைதெரியாமல்  சுழன்றுகொண்டே இருக்கிறது,இன்னமும்.



மேலும் படிக்க... "காந்தி ஆஸ்ரமம்."

Tuesday, January 20, 2015

இலக்கு..கவிதை

ஆற்றில் இருக்கும் மணலை அள்ளி
அமுதக்காப்பாய் இருக்கும் வரப்பை நீக்கி
ஊற்றுக்குழிகளின் வழிகளை அடைத்து
ஊரெல்லாம் ஆழ்துளையில் கிணறு போட்டு
நேற்றுவரை நம் முன்னோர் சேர்த்துக்காத்த
நீரையெல்லாம் காலி செய்தே புலம்புகின்றோம்

கண்முன் காணும் நீர்ப்பஞ்சம் தீர்க்க
கச்சிதமாய் ஓர் இலக்கு கொள்வோம்
எறும்புகூட நாளைக்கென்றே எண்ணி
எண்ணி  சேமித்து வைக்கும்
மண்ணில் வீழும் மழைதன்னை சேர்க்கும்
மாண்புதன்னை அறிந்துகொள்வோம்

மழைதன்னைப்பெரிதும் பொழியவைக்க
மரங்கள் பலவும் நட்டிடுவோம்
மழை நீர் பெருகிவரும்பொழுதில்
மனம் கொண்டதனை சேர்த்து வைப்போம்
மக்கள் துயரம்  மறைந்து போக கொள்வோம்
’மழைநீர் சேகரிப்பு ஒன்றே இலக்கு’ என்று!




மேலும் படிக்க... "இலக்கு..கவிதை"

Monday, January 19, 2015

பெருமை! கவிதை.

கதிரவனை சந்திரனை
காலத்தில் ஞாலத்திற்காய் அனுப்புவதால்
விண்ணுக்குப்பெருமை

உடலிலே உயிருக்குத்துணையாக‌
ஊடுருவி இருப்பதால்
காற்றுக்குப்பெருமை

நிலமங்கை மனம்குளிர‌
மழை அளிக்கமுயல்வதால்
நீருக்குப்பெருமை

ஏழைக்கு இன்னல் செய்யும்
ஏமாற்றுமனிதர்களைப்பொசுக்குவதால்
நெருப்புக்குப்பெருமை

அவர் இவர் என்றில்லாது
அனைவரையும் தாங்கி நிற்கும்
பூமிக்குப்பொறுமையே பெருமை.
மேலும் படிக்க... "பெருமை! கவிதை."

Saturday, January 17, 2015

நின்னொடும் எழுவர் ஆனேம்!(விபீஷண சரணாகதி)






கம்பராமாயணமென்னும் அமுதக்கடலில்  அண்மையில் நாங்கள்  பருகியது விபீடணன்  அடைக்கலப்படலம்.

ராமாயணம் என்பதே சரணாகதி சாஸ்திரம் என்னும் பெருமை பெற்றது என்பார்கள்.
தொட்ட இடம் தோறும் சரணாகதி என்னும் உயரிய நெறி விளக்கப்படுவதாகவே பெரியோர் கூறுவர்.

சரணாகதி என்பதற்கு அடைக்கலம் என்றே பொருள். நம்மிடம் உள்ள  உயர்ந்த பொருளை நம்மால் காப்பாற்ற இயலாமல் போகும்போது தகுதியுடைய ஒருவரிடம் அதனை ஒப்படைத்து எவ்விதம் அப்பொருளைக் காப்பாற்றித்தருமாறு கோருகிறோமோ அதுபோன்றே இந்த ஆத்மாவை பரமாத்மாவிடம் சமர்ப்பிக்கும்  செயலுக்கு சரணாகதி எனப்பெயர்.
ராமாயணம்  முழ்வதும் ஆராய்ந்துபார்த்தால் சரணாகதி எனும் அடைக்கலமாகிய தர்மமே தலையானது எனத்தெரிகிறது.

அப்படித்தான் இந்தவிபீடண சரணாகதியும்!







இலங்கைவேந்தன் இராவணனின் தம்பிகளில் ஒருவனும், எப்போதும் தர்மத்திலேயே தான் நிலைத்திருக்கவேண்டும் என்ற வரத்தையும் பெற்றவனுமான  விபீடணன்,இராவணனுக்குப்பல அறிவுரை சொல்லிப்பார்க்கிறான். சீதையைக்கவர்ந்தது, பிறகு  இராமன் யாரென அறியாமல்  அவருடன்  போரிட அண்ணன் நினைப்பது எல்லாம்  தவறென  சொல்கிறான்.


கடும் சினம் கொண்ட இராவணன்,”’ஒல்லை நீங்குதி, விழி எதிர் நிற்றியேல் விளிதியென்றனன் அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான்’ என சொல்வதாக கம்பன்  எழுதுகிறார். சீக்கிரத்தில் நீங்கிபோவாய் கண் முன்னால் நின்றால் (என் கையால்) இறந்திடுவாய் என்கிறானாம்!
அழிவுக்காலம் வரப்போவதால் அறிவினை நீங்கப்பெற்றானாம்!விநாசகாலம் வந்தால் விபரீதபுத்தி தானே!

விபீஷணன்  தனது தமையனிடம், இனிப்பேசிப்பயன் இல்லை என
நினைத்து  தான் கூறியவை எல்லாம் நீதி நூல்களுக்குப்பொருந்தியதுதான் எனினும்  தன் பிழை பொறுத்தருள வேண்டிக்கொண்டு   வெளியேறுகிறான்.

திருப்பாவையில் ஆண்டாள்  ‘பொல்லா அரக்கனைக்கிள்ளிக்களைந்தானை’ என்கிறாள். இராவணன்  பொல்லா அரக்கன். அப்படியானால் நல்ல அரக்கரும் உண்டா?

 அசுரர் குலத்தில் பிரகலாதன் பிறந்ததுபோல அரக்கர் குலத்தில் பிறந்து நல்ல அரக்கராய்  திகழ்ந்தவன்  விபீடணன். அரக்கியாகிய சூர்ப்பனகையே ராமனிடம்  கூறும்போது,’விபீஷணஸ்து தர்மாத்மா
 ந து ராக்ஷச சேஷ்டித’ என்கிறாள். ( விபீஷணன்,அறம் வழி நடப்பவன்  அரக்க செயல்கள் அற்றவன் என்று பொருள்.)
(வால்மீகிராமாயணத்தில் இந்த  வாக்கியம் வருகிறது)
 
இலங்கைஎனும் நாடு,  நண்பர்கள், செல்வம் என எல்லாவற்றையும்  துறந்து  இராமபிரானிடம் சரணடைய வருகிறான்.தலைமேல் கை குவித்து கண்ணில் நீர் மல்க  அடைக்கலம் தேடி வருகிறவனைப்பற்றி  இராமன்  கருத்து கேட்கிறார்.
 
 சுக்ரீவன் ஜாம்பவான் போன்றோர்  இராவணனின் தம்பி என்பதாலேயே விபீடணன் மீது ஐயம் கொள்கின்றனர். 
அவரவர்களுக்குத்தோன்றிய கருத்துக்களை சொல்கிறார்கள் அனைத்துமே விபீடணன் மீதான அவநம்பிக்கையில் வெளிப்பட்ட வார்த்தைகள்  தான்.
 
‘பாதகர் நம் வயிற் படர்வராமெனில்
தீதிலராய்  நமக்கன்பு செய்வரோ

என்று கேட்கிறார்கள்.
 
அனைத்தையும் பொறுமையாய்  கேட்ட  ராமர் பிறகு
அனுமனை நோக்கி கருத்து கேட்கிறார்.

வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன்
நுணங்கிய கேள்வியான் நுவல்வதாயினான்.
என்கிறார் அனுமனைக்கம்பன்.

பெரியோரிடம் பேசும் போது தலை வணங்கி கையால் வாயைப் பொத்திக்கொண்டு பேசுதல் மரபு என்பதை அறிகிறோம்.

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்
ன்பதுபோல  அனுமன் கருதுவதை கம்பன் இப்படி சொல்கிறார்.

உள்ளத்தினுள்ளதை உரையின் முத்துற
மெள்ளத்தம் முகங்கள் விளம்புமாதலால்
கள்ளத்தின் விளைவெலாங் கருத்திலாமிருள்
பள்ளத்தினன்றியே வெளியிற் பல்குமோ.
 
 
 



”ராகவா தாங்கள் அறியாதது எதுவும் இல்லை. . எங்களுக்கு  ஒரு மதிப்பு கொடுத்து விசாரிக்கிறாய் என்பதால் சொல்கிறோம்.

.“ கண்டவுடன் ஒருவரைப் பற்றி அபிப்பிராயம் நாமே எற்படுத்திக் கொள்வது எனக்கு சரியாகத் தோன்றவில்லை. விபீடணன்  , அன்னை சீதாதேவிக்கு அருகிருந்து நல்ல எண்ணமுடன் பணி செய்யும் திரிசடையின் தந்தை. நல்லவன்  இவன். காலம் கடந்து இந்த விபீஷணன் வந்திருக்கிறான் என்று ஒரு வாதம். இதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில், இந்த தேச காலமும், அவ்வப்போழுது மாறும். மனிதனுக்கு மனிதன் குண தோஷங்கள் மாறுவது போல மாறிக் கொண்டே இருக்கும்.  ராவணனிடத்தில் துர்குணம் கண்டு, தங்கள் சக்தியையும் அறிந்து கொண்டு, இப்பொழுது வந்திருப்பது அவன் புத்திசாலித் தனத்தை தான் காட்டுகிறது.. நல்ல எண்ணத்தோடு, நம்பிக்கையோடு வருபவனை அனாவசியமாக சந்தேகக் கண் கொண்டு பார்த்து நாமே நஷ்டமடைவோம். மற்றவர்களுடைய மனோ பாவத்தை சட்டென்று நாம் தெரிந்து கொள்வது அவ்வளவு சுலபமான செயலும் அல்ல. . இவன் முகமும் ஒளிமயமாக இருக்கிறது. கபடு உடையவனாகத் தெரியவில்லை. . கெட்டவனாக இருந்தால், நேருக்கு நேர் நிற்க மாட்டான். இவன் சொல்லும் தீயதாகத் தெரியவில்லை. அதனால் எனக்கு இவனுடைய நல்லெண்ணத்தில் சந்தேகம் இல்லை. மறைத்து வைத்துக் கொண்டாலும் ஒருவனது உடல் வாகும், முழுவதும் மறைந்து விடாது. உள் மனதின் பாவனைகளை அரசர்களின் நடையுடை பாவனைகள் கண்டிப்பாக காட்டிக் கொடுத்து விடும். சரியான தேச, காலம் அறிந்து தான் வந்திருக்கிறான். இதையெல்லாம் பார்க்கும் பொழுது இவனை நம் பக்கம் எற்றுக் கொள்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்.   நான் சொன்னதை ஏற்றுக் கொள்வதோ, தள்ளுவதோ, தங்கள் இஷ்டம். புத்திசாலிகளின் சிறந்தவனே, உங்கள் சொல் தான் பிரமாணம் ”என்று முடித்தான். சொல்லின் செல்வன் அனுமன் அல்லவா  அவன் உரையாடல் எவ்வளவு உன்னதமாக  இருக்கிறது!(அனுமன் கூறுவது அனைத்தையும் கம்பனின் பாடல்களால் அனுபவிக்கவேண்டும்)
வாயு குமாரன் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்த ராமர், தன் மனதில் ஏற்கனவே தீர்மானித்துக் கொண்டு விட்டாலும், மற்றவர்கள் அபிப்பிராயத்தையும் தெரிந்து கொள்ளும் பொருட்டு கேட்டுத் தெரிந்து கொண்ட பின், தன் எண்ணத்தைச் சொல்வதாக.கம்பரின் அற்புதமான  இந்தப்பாடல் வருகிறது..

இடைந்தவர்க் கபயம் யாமென் றிரந்தவர்க் கெறிநீர் வேலை
  கடைந்தவர்க் காகி ஆலம் உண்டவர்க் கண்டி லீரோ
 உடைந்தவர்க் குதவா னாயின் உள்ளதொன் றீயா னாயின்
  அடைந்தவர்க் கருளா னாயின் அறமென்னாம் ஆண்மை என்னாம்

 , யாராயினும், அடைக்கலம் என்று சொல்லிக் கொண்டு வந்தால் எப்பொழுதும் கை விட மாட்டேன். அவனிடம் குறை இருந்தால் கூட பொருட்படுத்த மாட்டேன்.   அடைக்கலம் என அண்டி வந்தவனைக் காப்பாற்றுவது தான் தர்மம்.  புகழும் (சொர்க்கம்) நல்ல கதியும் தரக் கூடியது.  இதனால் நம் நிலை மேன்மை பெறுமேயன்றி குறையாது. 
”சுக்ரீவா! வந்திருப்பது, விபீஷணன் தானா அல்லது ராவணனாகவே இருந்தாலும்  அடைக்கலம் தர  சித்தமாக  இருக்கிறேன் ஆகவே அவரை நீயேஅழைத்து வா”என்றார்.(ரவணனாக இருந்தாலும் எனும் பதம் கம்பனில் இல்லை  வால்மீகியில் மட்டுமே)
 
ராமரின் இந்த பேச்சைக் கேட்டு, வானர வீரனான சுக்ரீவன், குரல் நெகிழ நா தழு தழக்க, அன்புடன் பதில் சொன்னான்
 
. ”இதில் ஆச்சர்யப் பட என்ன இருக்கிறது. நீ தர்மம் அறிந்தவன். . எல்லோருக்கும் சுகத்தையே தருபவன். பெருந்தன்மையோடு நல்ல வழியில் நினைப்பவன். நீ சொன்னதைக் கேட்டு என் மனமும் மாறி விட்டது. என்னுடைய அந்தராத்மாவும், இந்த விபீஷணன் மாசற்றவன் என்றே நினக்கிறது.  இதோ  இப்போதே அழைத்துவருகிறேன்’ என்கிறான்
விபீடணன்  வருகிறான்.
 
 
கார்க்கடல் கமலம் பூத்த தெனப்பொலியக்கண்டான்
விபீடணன்  ராமனை கருங்கடலில்  பூத்த  தாமரைபோல பொலிவுடன் நிற்பதைக்காண்கிறானாம்! 
 
விபீடணைப்பார்த்த ராமர்,
 
 
 
குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு:பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம்:எம்முறை அன்பின் வந்த
அகனமர்க் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்!
புகலருங் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை

என்கிறார்!
 
 
’வரங்களின் வாரி யன்ன தாளினை வந்துசேர்ந்து அப்படியே   வீழ்ந்தான்விபீடணன் “நாய்போல் கடைப்பட்ட என்னை உன் சகோதரன் என்கிறாயே! ‘என அண்ணலின் அன்பில் திகைத்து ராமன் தன்னை இலங்கைக்கு அரசனாக முடிசூட்டிக்கொள்ள முடிவெடுத்தபோது அதனை மறுத்து   அண்ணல் கழலினையே தன்  தலைமீது வைத்துக்கொள்கிறான்.பரதனைபோல பாதுகையே தனக்கு விருப்பமானது என்கிறான்.


விபீடணனுக்கு அண்ணல் மீதான பக்தி  உன்னதமானது.
“சர்வலோக சரண்யாய’என்றும் ராமனிடம் என்னைத்தெரிவியுங்கள் என்னும்போது  நிவேதயத’ என்றும் சொல்கிறார்.நிவேதயத என்பது நிவேதனம் அதாவது சமர்ப்பணம் என்றுதானே ஆகிறது! பாகவதத்தில் பிரஹலாதன்  ஒன்பதுவிதமான பக்தியைக்குறிப்பிடும்போது ஆத்ம நிவேதனம் எனும் சரணாகதியை ஒன்பதாவதாகக் காட்டியுள்ளார்.அதனபடி ஆத்ம சமர்ப்பணம்  செய்ய அண்ணலிடம் அடைக்கலமாய் வந்தவர் விபீஷணன்.

 ஆழ்வார்கள் வரிசையில் இவரையும் விபீஷணாழ்வார் என்பார்கள்  .

.பட்டாபிஷேகம் முடிந்ததும் ராமர் இஷ்வாகு வம்ச தனமான ஸ்ரீரங்க விமானத்தையே விபீடணனுக்குப்பரிசாக அளித்தார் எனில் ராமருக்கு விபீடணன் மீதான் அன்பு எத்தகையது என உணரலாம்.

மன்னுடைய விபீடணர்க்காய் மதிலிலங்கைத்திசை நோக்கி மலர்க்கண் வைத்த என்னுடைய திருவரங்கற்கு... என்பது பெரியாழ்வார் அருளியது.

ஸ்ரீ ராம ஜெயம்!

 
மேலும் படிக்க... "நின்னொடும் எழுவர் ஆனேம்!(விபீஷண சரணாகதி)"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.